Published : 14 Dec 2024 04:42 PM
Last Updated : 14 Dec 2024 04:42 PM
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட காரைத்திட்டு பகுதியில், ஏராளமான இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், பழங்குடியினர் நலத்திட்டத்தில் அப்பகுதியில் அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காரைத்திட்டு பாலாற்றின் முகத்துவாரத்தின் மிக அருகே பாலாற்றங்கரையோரத்தில் உள்ள பனைமரங்களுக்கு நடுவே, 40-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் அமைத்து இருளர் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் பிள்ளைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர்.
குடிசைகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி பாலாற்றில் அதிகளவில் நீரோட்டம் ஏற்படும்போது வெள்ளத்தில் மூழ்கும் பகுதியாக உள்ளது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருவது அசம்பாவிதங்கள் ஏற்பட வழிவகுக்கும் என்பதால், அவர்களை பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்த பழங்குடியினர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இருளர் பழங்குடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்திய ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பாலாற்றங்கரையோரம் வசித்து வரும் இருளர் பழங்குடியின மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்குமாறும் புயல் பாதிப்பு நீங்கியதும் அடிப்படை வசதிகளுடன் கூடிய நிரந்தர இடத்தில் அவர்களை தங்கவைக்க ஏற்பாடுகளை செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்பேரில், புயலின்போது பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்ட இருளர் பழங்குடியினர், புயல் நீங்கியதும் பாலாற்றங்கரையிலேயே மீண்டும் வசிக்கின்றனர். அதனால், துணை முதல்வரின் உத்தரவை அமல்படுத்தும் வகையில் மேற்கண்ட பகுதியில் வசிக்கும் இருளர் மக்களை, நிரந்தரமாக பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் இருளர் பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் கூறியதாவது: பாலாற்றங்கரையில் அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வரும் எங்களுக்கு, தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செய்யும் உதவிகளை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் தடுக்கின்றனர்.
இங்கு தங்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மின்சார வசதியில்லாததால் எங்களின் பிள்ளைகள், வீடுகளில் படிக்க முடியாமல் மின்விளக்குகள் இருக்கும் இடத்தை தேடிச்சென்று படிக்கும் அவலம் உள்ளது. எங்கள் பிரச்சினைகள் குறித்து யாரிடமாவது பேசுவதற்கு கூட அச்சமாக உள்ளது. எங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கூறியதாவது: வாயலூர் ஊராட்சிக்குட்பட்ட காரைத்திட்டு அருகே பாலாற்றங்கரையில் குடிசைகளில் வசிக்கும் இருளர் பழங்குடியின மக்களை, அரசு திட்டத்தின் கீழ் மாற்று இடங்களில் தங்க வைப்பதற்காக அடையாள அட்டைகளை கேட்டுள்ளோம்.
இதில், 9 குடும்பத்தினரிடம் ஆதார் உட்பட அடையாள அட்டை இல்லாததால் பல்வேறு நிர்வாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும், மற்றவர்களிடம் மானாம்பதி மற்றும் பூஞ்சேரி பகுதியில் வசித்ததற்கான அடையாள அட்டைகள் உள்ளன. அதனால், உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT