நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று மழை விடுமுறை

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று மழை விடுமுறை
Updated on
1 min read

திருநெல்வேலி/ தென்காசி/ தூத்துக்குடி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை மற்றும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இன்று எந்த சிறப்பு வகுப்புகளும் கட்டாயம் நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் வெளியிட்ட அறிவிப்பில், பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பருவத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. இத் தேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

13 படகுகள் சேதம்: தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் வழியாக கடந்து சென்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள 265 விசைப்படகுகளும் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நாட்டுப்படகுகளும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கீழவைப்பார், சிப்பிக்குளம், வேம்பார், பெரியசாமிபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல் அலைகள் மேலெழும்பி படகுகளை கரைக்கு தள்ளியதில் நாட்டுப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதமடைந்தன. மொத்தம் 13 நாட்டுப்படகுகள் சேதமடைந்துள்ளன. மேலும் படகுகளில் இருந்த ஏராளமான வலைகள் கடல் அலையால் இழுத்து செல்லப்பட்டன. இதனால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in