

கோவை மாநகருக்குள் வரும் வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகளை ஒரே இடத்திலிருந்து இயக்குவதற்காக வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ரூ.168 கோடி மதிப்பில் 10.60 ஏக்கர் பரப்பில் அமைவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணியை 2020-ல் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்ற நிலையில், 2021-ல் ஆட்சி மாறியதால் பணிகளில் பிரேக் விழுந்தது. கரோனாவை காரணம் காட்டி கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. அப்போது நின்றதுதான் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட 40 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில், அரசு தருவதாகச் சொன்ன மானிய தொகை வராததால் பணிகளை தொடர முடியவில்லை என கைவிரிக்கிறது மாநகராட்சி நிர்வாகம். அதிமுகவினரோ, “எங்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் திமுக அரசு இதை கிடப்பில் போட்டுள்ளது” எனக் கடுகடுக்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம், “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் இது என்பதால் திமுக அரசால் காழ்ப்புணர்ச்சியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. திமுகவுக்கு வேண்டப்பட்ட ஓர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் வாங்கிக் குவித்துள்ள இடத்தின் அருகே ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை மாற்றி அந்த இடத்தின் மதிப்பை அதிகரிக்கத் திட்டமிடுகிறார்கள். அதற்காக, கிட்டத்தட்ட ரூ.40 கோடி வரை செலவிடப்பட்டுவிட்ட இந்தத் திட்டத்தை முடக்கி மக்களின் பணத்தை வீணடிக்கிறார்கள்.
இதுகுறித்து சட்டப்பேரவையில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பிய போது, ‘விரைவில் பணிகள் தொடங்கப்படும்’ என்றார் அமைச்சர் நேரு. அவர் இப்படிச் சொல்லி மாதக் கணக்கில் ஆகியும் புதிதாக ஒரு செங்கலைக்கூட நகர்த்தவில்லை. இதற்கெல்லாம் கோவை மக்கள் தேர்தலில் திமுக-வுக்கு தக்கபாடம் புகட்டுவார்கள்” என்றார் ஆவேசமாக. கோவை திமுக மூத்த நிர்வாகிகளோ, “நிதி பற்றாக்குறை காரணமாகவே பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கு வேறெந்த அரசியல் காரணமும் கிடையாது. கோவைக்கு தேவையான திட்டங்களை தமிழக முதல்வர் தொடர்ச்சியாக அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதனால் திமுக-வுக்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவை பொறுத்துக்கொள்ள முடியாத அதிமுக-வினர் இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புகின்றனர்” என்கிறார்கள். பேருந்து நிலைய திட்டப்பணியை தொடங்க வலியுறுத்தும் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.எஸ்.மோகன், ஆர்டிஐ மூலம் கேட்ட கேள்விக்கு, ‘மாநகராட்சி நிதி 50 சதவீதமும் அரசு மானியம் 50 சதவீதமும் இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட வேண்டும்.
அதில், அரசு மானியம் ரூ.84 கோடி இதுவரை பெறப்படவில்லை’ என ஆதாரபூர்வமாக தெரிவித்துள்ளது கோவை மாநகராட்சி. கோவை மக்களுக்காக பார்த்துப் பார்த்து திட்டங்களை தருவதாகச் சொல்லும் முதல்வர், முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்று பார்க்காமல் இதையும் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றட்டும்!