மாம்பாக்கம் அருகே அதிகளவில் வெளியேறும் உபரிநீர்: ரயில்கள் வேகம் குறைத்து இயக்கம்

மாம்பாக்கம், பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேறுவதால்  மதுராந்தகம் அருகே 30 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மாம்பாக்கம், பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் அதிகளவில் வெளியேறுவதால்  மதுராந்தகம் அருகே 30 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Updated on
1 min read

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் மாம்பாக்கம் மற்றும் பாக்கம் பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதனால், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் மதுராந்தகம் அருகே 30 கி.மீட்டர் வேகத்தல் இயக்கப்படுவதால், ஒரு மணி நேரம் தாமதமாக ரயில்கள் சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில், வியாழக்கிழமை முதலே கன மழை பெய்து வருகிறது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் மதுராந்தகம் பகுதியில் சுமார் 123 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், மாம்பாக்கம், பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் முழுமையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால், மதுராந்தகத்தின் பல்வேறு இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தைச் சுற்றி அதிகப்படியான வெள்ள நீர் செல்வதால், தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில்கள் தாமதமாக செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதில், நெல்லை, விழுப்புரம், தூத்துக்குடி ,திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயில்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக செல்கின்றன.

மேற்கண்ட குறிப்பிட்ட பகுதியில் 30 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால், ரயில்வே துறை பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர், போலீஸார் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in