திண்டுக்கல் தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்வர் உத்தரவு

திண்டுக்கல் தீ விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்வர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த சிறுமி உள்பட 6 பேரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (வயது 30, மாரியம்மாள் (வயது 50), தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி (வயது 50), சுப்புலட்சுமி (வயது 45), திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 36), கோபிகா (வயது 6), ராஜசேகர் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? திண்டுக்கல்லில் உள்ள திருச்சி சாலையில் நான்கு மாடி கட்டிடத்தில் சிட்டி மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 60-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். வியாழக்கிழமை (டிச.12) இரவு கட்டிடத்தின் கீழ் தளத்தில் உள்ள மின்சாதனம் வெடித்து சிதறியதில் தீப்பற்றியது. தீ மளமளவென கீழ் தளத்திலும், அதைத் தொடர்ந்து மேல்தளங்களுக்கும் பரவியது. நோயாளிகள், உதவியாளர்களை உடனடியாக மருத்துவமனை ஊழியர்கள் வெளியேற்றினர்.

தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மாடியிலிருந்து கீழே வர முடியாமல் சிக்கிக் கொண்ட நோயாளிகளை ஏணி வைத்து மேலே சென்று ஜன்னலை உடைத்து மீட்டனர். தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ கட்டுக்குள் வராததால் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இரவு 11 மணியளவில் தீயை அணைத்தனர். அதன் பிறகு அனைத்து அறைகளிலும் சோதனையிட்டனர். விபத்தில் 6 வயது சிறுமி உள்பட 6 பேர் இறந்தது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in