

கடலூர்: வீராணம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து வருவதால் ஏரி நிரம்பி வருகிறது. இந்நிலையில், ஏரியின் பாதுகாப்பை கருதி ஏரியில் இருந்து வடிகால் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி ஆகும். இதன் முழு கொள்ளவு 47.50 அடி ஆகும். இதன் மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளாக காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டப்பகுதிகளில் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளைநிலம் பாசனம் பெறுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் வீராணம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளான ஜெயங்கொண்டம், அரியலூர், ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம்,பாப்பாக்குடி, இறவாங்குடி பகுதியில் கன மழை பெய்து வருவதால் அந்த மழை தண்ணீர் பல்வேறு காட்டாறுகள் மூலம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. ஏரியின் நீர்மட்டம் இன்று(டிச.12) 45.55 அடியாக இருந்தது. ஏரிக்கு செங்கால் ஓடை மற்றும் காட்டாறுகள் வழியாக விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கன தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஏரியின் பாதுகாப்பை கருதி இன்று(டிச.12) மதியம் ஏரியின் பிரதான வடிகால் மதகுகான வெள்ளியங்கால் ஓடை மதகு வழியாக விநாடிக்கு 500 கன தண்ணீரும் அடியும், விஎன்எஸ்எஸ் மதகு வழியான விநாடிக்கு ஆயிரத்து 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 74 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. விவசாய பாசனத்துக்கு தண்ணீர் தேவையில்லாதால் பாசன மதகுகள் அடைக்கப்பட்டுள்ளது. கீழணையில் இருந்து ஏரிக்கு தண்ணீர் வரும் வடவாறு மதகும் அடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சிதம்பரம் நீர் வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் தெரிவிக்கையில் வானிலை ஆய்வு மையத்தால் கன மழை அறிவிக்கப்பட்ட நிலையில் ஏரியின் பாதுகாப்பை கருதி அதன் வடிகால் மதகுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கன மழையின் அளவை பொறுத்து வடிகால் மதகுகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும் அல்லது குறைக்கப்படும். தொடர்ந்து ஏரியின் கரைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. என்றார்.