முழு கொள்ளளவை எட்டும் பூண்டி ஏரி: விநாடிக்கு 1,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

இதிருவள்ளூர்: மழைநீர் வரத்து அதிகரிப்பால் வியாழக்கிழமை மதியம் விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக, நீர் வள ஆதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. இந்த ஏரிக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மற்றும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் கிருஷ்ணா நதி நீர் ஆகியவை முக்கிய நீர் ஆதாரங்களாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் ஃபெஞ்சல் புயல் காரணமாகவும் தற்போது பெய்துவரும் மழை காரணமாகவும் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதில்,ஏற்கெனவே கடந்த செப்டம்பர் 23-ம் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் கிருஷ்ணா நதி நீர் விநாடிக்கு 300 கன அடி என்ற வீதத்தில் வந்து கொண்டிருக்கிறது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக விநாடிக்கு 990 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அதன் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் 2,839 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மொத்த உயரமான 35 அடியில் 34.05 அடி நீர் மட்டம் உள்ளது.

இந்நிலையில் பூண்டி ஏரி 88 சதவீதம் நிரம்பியுள்ளது. இதனால் நீர் வரத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் நீர் வள ஆதாரத் துறையினர், வியாழக்கிழமை மதியம் 1.30 மணியளவிில் விநாடிக்கு ஆயிரம் கன அடி உபரி உபரி நீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், உபரி நீர் திறப்பு காரணமாக கொசஸ்தலை ஆற்றுக்கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நீர் வள ஆதாரத் துறையினர் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in