புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு அதிகம்: ஆய்வுக்கு பிறகு மத்திய குழுவினர் கருத்து

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் மரம் விழுந்து சேதமடைந்த உயர் அழுத்த மின்மாற்றியை பார்வையிடும் மத்திய குழுவினர். படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் மரம் விழுந்து சேதமடைந்த உயர் அழுத்த மின்மாற்றியை பார்வையிடும் மத்திய குழுவினர். படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு அதிகம். மத்திய அரசிடம் இதுதொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்போம் என்று மத்திய குழுவினர் தெரிவித்தனர்.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் நேற்று இரண்டாவது நாளாக வெள்ள சேத பாதிப்புகளை மத்திய குழுவினர் பார்வையிட்டனர். பின்னர் பிற்பகலில் அக்குழுவினர் தங்குமிடத்துக்கு திரும்பினர். அங்குள்ள கருத்தரங்கு அறையில் வெள்ள சேதங்களை விளக்கும் வகையில் அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் புதுச்சேரியின் தலைமைச் செயலர் சரத்சவுகான், அரசு செயலர்கள் மோரே, பங்கஜ்குமார், கேசவன், முத்தம்மா, நெடுஞ்செழியன், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் அரசு துறை இயக்குநர்கள், உயரதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் 60 படக் காட்சிகள் மூலம் வெள்ள சேதங்களை மத்திய குழுவினருக்கு அதிகாரிகள் விளக்கினர்.

இதுதொடர்பாக மத்திய குழு அதிகாரிகளிடம் கேட்டபோது, "புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதுகுறித்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்போம். அதையடுத்து மத்திய அரசு முடிவு எடுக்கும்" என்று தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in