

திருவள்ளூர்: தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் 8 காவல் பயிற்சி பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் மொத்தம் 2665 பேர் ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படை ஆகிய பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று முன்தினம் அடிப்படை பயிற்சிகள் துவங்கியது.
இதில் திருவள்ளூர் மாவட்டம் கனகவல்லிபுரம் கிராமத்தில் இயங்கி வரும் திருவள்ளூர் காவல் பயிற்சி பள்ளியில் இந்த ஆண்டு ஆயுதப்படை இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கான அடிப்படை பயிற்சிக்காக இரண்டாம் நிலை பெண் காவலர்களாக திருவண்ணாமலையில் 45, விழுப்புரத்தில் 44, கடலூரில் 36, வேலூர் மற்றும் புதுக்கோட்டையில் தலா 24, ராமநாதபுரத்தில் 22, தஞ்சாவூர் மற்றும் திருவாரூரில் தலா 19, அரியலூரில் 14, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, கரூரில் தலா 11, மயிலாடுதுறையில் 9, திருச்சியில் 8, பெரம்பலூரில் 3 என மொத்தம் 300 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 283 பேர் பயிற்சி பெற்று வருகி்னறனர்.
இந்த அடிப்படை பயிற்சி ஏழு மாதம் நடைபெறும் என காவல் துறை அதிகாரி ஒருவர் கூறினார். இதனிடையே, வீடியோ கான்பரன்சிங் மூலமாக சென்னை வண்டலுாரில் உள்ள காவல் பயிற்சி தலைமையகத்திலிருந்து காவல்துறை தலைவர் ஜெயகவுரி, துணைத் தலைவர் ஆனி விஜயா, ஆகியோர் காவலர் பயிற்சிக்கு வந்தவர்களை வரவேற்று, அறிவுரை வழங்கி காவலர் பயிற்சியை துவக்கி வைத்தனர்.
திருவள்ளூர் காவல் பயிற்சி பள்ளியில் காவல் பயிற்சி தலைமையக காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு காவலர் பயிற்சி பெற வந்த 283 பெண் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பெண் காவலர்கள் பணி மேற்கொள்வது குறித்து விளக்கம் அளித்தார் என்று காவல் துறை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.