புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிறுவு திறன் அதிகரிப்பு

புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிறுவு திறன் அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய சுற்றுச்சூழலை பாதிக்காத புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இதற்காக, வீடுகளில் மேற்கூரை அமைத்து சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்ய மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.

நாட்டில் காற்றாலை, சூரிய சக்தி மின்நிலையங்களை அமைக்க சாதகமான சூழல் நிலவும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இதனால், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி மொத்த புதுப்பிக்கத்தக்க மின் நிறுவு திறன் 20,724 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளது.

இது கடந்த ஆண்டில் 18,288 மெகாவாட்டாக இருந்தது. கடந்த ஓராண்டில் மட்டும் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி நிறுவு திறன் 2,438 மெகாவாட் அதிகரித்து உள்ளது. இதில் காற்றாலை 276 மெகாவாட்டும், சூரியசக்தி மின்சாரம் 1,956 மெகாவாட்டாகவும் உள்ளது.

தற்போது, அனல், அணு, எரிவாயு மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் என அனைத்து வகை மின்சாரத்தையும் சேர்த்து தமிழகத்தில் மொத்த நிறுவு திறன் 36,563 மெகாவாட்டாக உள்ளது. இது கடந்த ஆண்டில் 34,706 மெகாவாட்டாக இருந்தது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in