காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று (டிச.2) இரவு கைது செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த பால்மணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், பால்மணியின் சகோதரர் கலைமணி மற்றும் அதே ஊரைச் சேர்ந்த மோகன்குமார், சுதின், மாணிக்கவேல், ஆகாஷ், ராமன், செல்வநாதன், தமிழ்க்கலை, சக்திவேல், வினித்குமார், பொன்னையன், கமலேஷ், சிவக்குமார், பூவரசன், ஆறுமுகம், ரத்தினவேல், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த நிரஞ்சன், சிலம்பரசன் ஆகிய 18 மீனவர்கள் கடந்த 1ம் தேதி இரவு 8 மணியளவில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை கோடியக்கரைக்கு அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகு பழுதாகி கடலில் மீனவர்கள் தத்தளித்து உள்ளனர். இதனிடையே, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 18 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒரு வாரமாக தொழிலுக்குச் செல்லாமல் இருந்த மீனவர்கள், டிசம்பர் 1ம் தேதி மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்களிடயே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in