Published : 15 Jun 2018 03:30 PM
Last Updated : 15 Jun 2018 03:30 PM

மானாமதுரையில் அரசுப் பேருந்தில் பெண் போலீஸிடம் டிக்கெட் எடுக்கச் சொன்ன நடத்துநர், ஓட்டுநருக்கு அடி உதை

 மானாமதுரையில் அரசுப் பேருந்தில் பயணித்த பெண் போலீஸிடம் டிக்கெட் எடுக்கச் சொன்ன நடத்துநர், ஓட்டுநரை போலீஸார் உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அரசு போக்குவரத்து கிளையிலிருந்து வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் அரசுப் பேருந்து புறப்பட்டது. இதில் ஓட்டுநர் செந்தில்குமார் பேருந்தை இயக்கினார்.

இரவு 10 மணிக்கு பஸ் சிவகங்கையை அடைந்தது. பின்னர் மானாமதுரைக்கு புறப்பட்டபோது, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் போலீஸாக உள்ள கிருபாராணி, சீருடையில் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, நடத்துநர் முருகானந்தம், பெண் போலீஸ் கிருபாராணியிடம் டிக்கெட் கேட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த கிருபாராணி, 'நான் போலீஸ். போலீஸ்காரர்கள் பஸ்களில் டிக்கெட் எடுக்காமல்தான் சென்று வருகிறோம், நீங்கள் என்ன புதிதாகக் கேட்கிறீர்கள்?' என நடத்துநரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதற்குப் பதிலளித்த நடத்துநர் முருகானந்தம்,  'நீங்கள் வெளி மாவட்ட போலீஸார், கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனைக்கேட்ட ஓட்டுநர் செந்தில்குமார் பேருந்தை நிறுத்திவிட்டு, 'டிக்கெட் எடுங்கள்' என போலீஸாரிடம் கூறியுள்ளார்.

பேருந்தில் இருந்த மற்ற பயணிகளும் கிருபாராணியை டிக்கெட் எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இதில் சங்கடப்பட்ட கிருபாராணி, ரூ. 20 கொடுத்து ரூ.18-க்கு டிக்கெட் எடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, மானாமதுரை எஸ்ஐ வாசிவத்திடம், அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்க வலியுறுத்திய ஓட்டுநர், நடத்துநர் குறித்து புகார் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஓட்டுநர் செந்தில்குமார், நடத்துநர் முருகானந்தம் ஆகியோர் இரவு 11.30 மணிக்கு மானாமதுரை சிப்காட்டில் உள்ள போக்குவரத்துக் கழக பணிமனையில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்தனர். அப்போது, எஸ்ஐ வாசிவம் மற்றும் போலீஸார் சென்று அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கைது செய்து அடித்து, உதைத்ததாகத் தெரிகிறது.

பின்னர் இன்று (வெல்ளிக்கிழமை) அதிகாலையில் சம்பவத்தைக் கேள்விப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஓட்டுநர், நடத்துநரை காவல் நிலையத்திலிருந்து மீட்டு அழைத்து வந்தனர். போலீஸார் அடித்ததில் காயமடைந்த ஓட்டுநர் செந்தில்குமார், நடத்துநர் முருகானந்தம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவத்தில் அராஜகமாக செயல்பட்ட மானாமதுரை எஸ்ஐ வாசிவம் மற்றும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை கிளை போக்குவரத்து தொழிலாளர்கள் அதிகாலையில் இயக்க வேண்டிய பேருந்துகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரில் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ்களை இயக்காமல் ஆங்காங்கே நிறுத்திவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதிஅளித்தனர். இதனால் மறியலைக் கைவிட்டுப் பணிக்குச் சென்றனர்.

இதற்கிடையில், பெண் போலீஸ் கிருபாராணி, மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் 'டிக்கெட் எடுத்த என்னிடம் நடத்துநர், ஒட்டுமொத்த போலீஸ் சமுதாயத்தையே இழிவாகப் பேசினார், ஓட்டுநர் என்னை செல்போனில் படம் எடுத்தார். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் புகார் அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x