“மழைநீர் வடிகால் பணிகள் ‘வெற்று விளம்பரங்கள்’ என்பதைக் காட்டும் சென்னை சாலைகள்” - இபிஎஸ்

இடம்: சென்னை எழும்பூர் | படம்: ஆர்.ரகு
இடம்: சென்னை எழும்பூர் | படம்: ஆர்.ரகு
Updated on
1 min read

சென்னை: “மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை காரைக்காலுக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையே, புதுவைக்கு அருகே கடக்கக்கூடும். அப்போது, காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் பரவலாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நகரில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி இபிஎஸ் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவில், “ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவருகிறது. மக்கள் அனைவரும் சென்னை வானிலை ஆய்வு மையம் அளிக்கும் தகவல்கள் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மழைநீர் வடிகால் பணிகள் என்று திமுக ஆட்சியாளர்கள் எடுத்த போட்டோஷூட்கள் வெற்று விளம்பரங்கள் தான் என்பதை இன்றைய சென்னையின் சாலைகள் அம்பலப்படுத்தியுள்ளன. இனி இவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை. எனவே, எனது அறிவுறுத்தலின்படி, அதிமுக ஐடி பிரிவின் சார்பில் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது. சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளை கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in