

புதுடெல்லி: பாம்பன் புதிய ரயில் பாலம் தரம் குறைவாக இருப்பதாக இந்திய ரயில்வே-க்கு தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில் பாம்பன் ரயில் பாலத்தின் தரத்தை உறுதி செய்த பின்னரே அதை திறந்திட வேண்டும் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் எம்பியான கே.நவாஸ் கனி, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து அந்த கடிதத்தில், “ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே மேம்பாலத்தில் கடல் அரிப்பு பிரச்சினையை தீர்க்க முழுமையான நடவடிக்கை இல்லை. தூண்களில் தற்போதே அரிப்பு ஏற்பட தொடங்கியுள்ளதாகவும், புதிய பாலத்தில் சோதனை ஓட்டத்தில் தண்டவாளத்தில் அதிக ஒலி ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, புதிய பாலத்தில் உள்ள குறைகளை மறுஆய்வு செய்து சரி செய்திட வேண்டும் என்று, இந்திய ரயில்வே-க்கு தெற்கு ரயில்வே அதிகாரி சவுத்ரி ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். இந்த பாலத்தின் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், விரைவில் திறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இச்சூழலில் ஒரு ரயில்வே அதிகாரியே இதுபோன்ற எச்சரிக்கையுடன் இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். இது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வது அவசியமாகிறது. இதற்காக, பாம்பன் புதிய ரயில் பாலத்தின் தரத்தை முழுமையாக உறுதி செய்த பின்னரே பாலத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.பாலத்தின் தரத்தை மறுஆய்வு செய்து குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த பாலத்தை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.