சீமான் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

சீமான் | கோப்புப்படம்
சீமான் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கூடாது என அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மீனவர்களைத் தாக்கிய இலங்கை ராணுவத்தை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், இரு சமூகத்தினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் பேசியதாக அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அந்த வழக்கில் கைதான அவர் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் கடந்த 2021-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்குமார், “இந்த வழக்கில் 13 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது,” என வாதிட்டார். அப்போது நாம் தமிழர் கட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.சங்கர், “சாட்சிகள் விசாரணை தொடங்கிவிட்டதால் இந்த மனுவை திரும்பப்பெறுவதாக” கூறினார். அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்தனர். மேலும், இந்த வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in