திருப்பூர் அருகே ரயிலில் தீ விபத்து

திருப்பூர் அருகே ரயிலில் தீ விபத்து
Updated on
1 min read

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆந்திரா செல்லும் ரயிலில், திருப்பூர் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு, அங்கிருந்து ரயில் புறப்பட்டு சென்றது.

கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து, ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் செல்லும் சபரிமலை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் வஞ்சிபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ரயிலின் பின்பக்க மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் திடீரென புகை எழுந்தது.

அதிக புகை எழுந்ததை கண்ட பயணச்சீட்டு பரிசோதகர், இன்ஜின் டிரைவருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து, அந்த ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, ரயிலில் இருந்த தீயணைப்பான்கள் மூலம் ரயில் பெட்டியில் பற்றிய தீ அணைக்கப்பட்டது.

விசாரணையில், ரயில் பெட்டியின் சக்கரம் மற்றும் பிரேக் இடையே இருந்த ரப்பர் உராய்ந்து புகையுடன் லேசாக தீப்பற்றியது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் ரயிலில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். சிறிது நேரத்தில் பழுது சரி செய்யப்பட்டு, ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in