

மதுரை: ‘சபரிமலை ஐயப்பன் குறித்து சர்ச்சைக்குரிய பாடல் பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்’ என பாஜக மாநில வழக்கறிஞர் அணி தலைவர் வணங்காமுடி கூறியுள்ளார்.
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர் பிரிவு சார்பில் தேசிய அரசிலமைப்பு தினம் கொண்டாடப்பட்டது. மதுரை மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஐயப்ப ராஜா தலைமை வகித்தார். பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநிலத் தலைவர் வணங்காமுடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வணங்காமுடி, "சபரிமலை ஐயப்பன் குறித்து அவதூறாக பாடல் பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் புகார் அளிக்கப்படுகிறது.
இந்தப் புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். இசைவாணி பாடல் ஒரு திட்டமிட்ட சதி, இந்து மதத்தை தொடர்ந்து கொச்சைப்படுத்த வேண்டும் என நினைத்து இதை செய்கின்றனர். இதற்கும் தமிழத்தில் ஆட்சி நடத்தும் திமுக அரசுக்கும் தொடர்பு உள்ளது. பல்வேறு இயக்கங்கள் வைத்தும் சில நபர்களை வைத்தும் இந்து மதத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என தமிழக முதல்வரும், துணை முதல்வரும் செயல்பட்டு வருகின்றனர். ஐயப்பன் பாடலை வைத்து இந்து மதத்தை கொச்சைப்படுத்துவதை பாஜக வழக்கறிஞர் பிரிவும் சும்மா விடாது” என்று வணங்காமுடி கூறினார்.