அமலாக்கத் துறை விசாரணையை தள்ளிவைக்க கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி

அமலாக்கத் துறை விசாரணையை தள்ளிவைக்க கோரிய செந்தில் பாலாஜி மனு தள்ளுபடி
Updated on
1 min read

சென்னை: பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, அதை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது தமிழக மின்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த பிரதான வழக்குகளின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், தனக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதான வழக்குகள் மீதான விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மறு ஆய்வு மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in