எம்ஜிஆர் பாணியில் மீனவ நண்பனாகும் தவெக தலைவர் விஜய்!

எம்ஜிஆர் பாணியில் மீனவ நண்பனாகும் தவெக தலைவர் விஜய்!
Updated on
2 min read

யாரைத் தொட்டால் தமிழக அரசியலில் ஜெயிக்க முடியும் என்பதைத் தெளிவாக உணர்ந்து, பாசிச பாஜக, பாயாச திமுக என மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை கடுமையாக எதிர்த்து வருகிறார் தவெக தலைவர் நடிகர் விஜய். அது​மட்டுமில்லாது பெரும்​பான்​மையாக உள்ள சமுதா​யங்களை தன்னை நோக்கி திருப்பும் முனைப்​பிலும் அவர் ஈடுபட்​டுள்​ளார். அந்த வகையில், தமிழகத்தின் மிகப்​பெரிய வாக்கு வங்கியான மீனவர் சமூகத்தை தங்கள் பக்கம் திருப்பும் வேலைகளை தவெக -​ வினர் கச்சிதமாக செய்து வருகின்​றனர்.

அரசியலுக்கு வரும் முன்பாகவே, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த ஸ்னோலின் உள்ளிட்​ட​வர்​களின் குடும்பத்​திற்கு இரவோடு இரவாகச் சென்று ஆறுதல் கூறியவர் விஜய். அண்மையில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்திருப்​பதைக் கண்டித்து அறிக்கை விட்டார். அத்துடன், தவெக நிர்வாகிகள் கூட்டத்​தில், மீனவர்​களுக்கு பாதிப்பை உண்டாக்கும் நெல்லை மணவாளக்​குறிச்சி அரியவகை மண் ஆலை விரிவாக்​கத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் தொடர்ச்​சியாக, ஸ்னோலின் தாய் உள்ளிட்ட அவரது குடும்பத்​தினர் தவெக-வில் இணைந்​திருக்​கிறார்கள். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் தூத்துக்குடி மீனவர்கள் அதிமுக​வுக்கு எதிரான நிலைப்​பாட்டில் இருந்​தனர். கடந்த தேர்தல்​களில் அதை தங்களுக்கான ஆதவு வாக்குகளாக மாற்றிக் கொண்டது திமுக. இந்த வாக்குகளை இப்போது தங்கள் பக்கம் திருப்பும் வேலையில் தவெக இறங்கி இருக்​கிறது.

அதன் தொடக்கம் தான் ஸ்னோலின் குடும்பத்​தினர் தவெக-வில் இணைந்தது என்கிறார்கள். தூத்துக்குடி மாவட்​டத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மீனவர் வாக்குகள் இருப்​ப​தாகச் சொல்லப்​படு​கிறது. இதேபோல், மணல் ஆலை விரிவாக்​கத்தில் நெல்லை மீனவர்​களுக்கு ஆதரவாக குரல் கொடுத்​திருப்​பதால் அந்த மாவட்ட மீனவர்​களின் கவனமும் இப்போது விஜய் பக்கம். இதேபோல் நாகை மாவட்​டத்தில் சுமார் ஆயிரத்​துக்கும் மேற்பட்ட மீனவ இளைஞர்கள் மற்றும் பெண்களை நாதக-வில் இருந்து விலக்கி தவெக-வில் இணைத்​திருக்​கிறார் அந்த மாவட்ட தவெக செயலாளர் சுகுமாரன்.

இப்படி மீனவ நண்பனாக உருவெடுக்கும் விஜய், அடுத்ததாக மீனவர் பிரச்​சினை​களுக்காக பெரும் போராட்​டத்தை விரைவில் நடத்த இருப்பதாக கூறுகிறார்கள். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை​யினர் கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் சோகமாக உள்ளது. மத்திய - மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய தீர்வைச் சொல்ல​வில்லை என்ற ஆதங்கம் மீனவ மக்களுக்கு இருக்​கிறது.

இந்தப் பிரச்​சினைக்காக மீனவ மக்களை திரட்டி ராமநாத​புரம் அல்லது நாகப்​பட்​டினத்தில் மத்திய - மாநில அரசுகளை கண்டித்து மிகப்​பெரிய அளவில் ஆர்ப்​பாட்​டத்தை நடத்த விஜய் தயாராகி வருவதாக தவெக தரப்பில் சொல்கிறார்கள். இதன் மூலம், அதிமுக மற்றும் நாதக-வுக்கு ஆதரவாக இருக்கும் மீனவர் வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டு வருவதே விஜய்யின் திட்டம். சினிமாவில் மீனவ நண்பனாக, படகோட்​டியாக எம்ஜிஆர் நடித்​ததால் தான் இன்றளவும் மீனவர்கள் அதிமுக அனுதாபிகளாக இருக்​கிறார்கள். அந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட விஜய்​யும் மீனவ நண்​பனாக அவ​தாரம் எடுக்​கிறார். ​பார்க்​கலாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in