

சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக கே.ஆர்.பெரியகருப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது பட்டமங்கலம் என்னும் இடத்தில் திமுகவினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட 8 பேர் மீது, திருக்கோஷ்டியூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிவகங்கை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நடைபெற்றது. அமைச்சர் பெரியகருப்பன் சார்பில் வழக்கறிஞர் கே.முத்துராமலிங்கம் ஆஜராகி, "சம்பவம் நடந்தபோது அந்த இடத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இல்லை. வேறொரு இடத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். சம்பவத்துக்கும் அவருக்கும் எந்த தொடர்பு இல்லை. எனவே, வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மீதான தேர்தல் தகராறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.