பாகிஸ்தான் கடற்படையிடமிருந்து இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்ட குஜராத் மீனவர்கள்
பாகிஸ்தான் கடற்படையிடமிருந்து இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்ட குஜராத் மீனவர்கள்

குஜராத் மீனவர்களை மீட்டது போல இந்திய கடலோர காவல்படை தமிழக மீனவர்களையும் காக்க கோரிக்கை

Published on

ராமேசுவரம்: பாகிஸ்தான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட குஜராத் மீனவர்களை இந்திய கடலோர காவல்படை பாதுகாப்பாக மீட்டது. இதேபோல், இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களையும் பாதுகாக்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் கடற்படை, குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு விசைப்படகை கைப்பற்றி, படகிலிருந்த 7 மீனவர்களை சிறைப்பிடித்தனர். இதனை அறிந்த இந்திய கடலோர காவல் படையினர், பாகிஸ்தான் கடற்படையின் ரோந்து கப்பலை இடைமறித்து 7 குஜராத் மீனவர்களையும் மீட்டு ஓகா துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர். குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையிடமிருந்து மீட்ட இந்திய கடலோர காவல்படையினருக்கு தமிழக மீனவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், 100 கடல்மைல் தூரமாக இருந்தாலும் குஜராத் மீனவர்களை மீட்கும் இந்திய கடலோர காவல்படை, 20 கடல் மைல் தொலைவில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையிடம் இருந்து பாதுகாக்க தவறுவது ஏன்? குஜராத் மீனவர்கள் மட்டும் தான் இந்திய மீனவர்களா? தமிழக மீனவர்கள் இந்திய மீனவர்கள் இல்லையா? குஜராத் மீனவர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பினை, தமிழக மீனவர்களுக்கும் இந்திய கடலோர காவல்படையும், இந்திய கடற்படையும் அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in