

தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ.வுக்கு அதிமுகவில் மீண்டும் அமைப்பு செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக தளவாய் சுந்தரத்தை, அவர் ஏற்கெனவே வகித்து வந்த அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில், மீண்டும் அவருக்கு அதே பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு: முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான தளவாய் சுந்தரம் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், கடந்த அக்டோபர் 8-ம் தேதி பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார். அவர் அந்நிகழ்வில் கலந்துகொண்டது தொடர்பாக வருத்தம் தெரிவித்து விளக்கம் அளித்துள்ளார். எனவே, அவர் அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பிலும் மீண்டும் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.