அர்ஜுன் சம்பத் மகன், கஸ்தூரி கைது: இந்து முன்னணி மாநில தலைவர் கண்டனம்

கோவையில் மருதமலை முருகன் கோயிலில் வேல் வழிபாடு நிகழ்ச்சியில்  இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டார்.
கோவையில் மருதமலை முருகன் கோயிலில் வேல் வழிபாடு நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்துகொண்டார்.
Updated on
1 min read

கோவை: “திமுக அரசு இந்துகளுக்கு விரோதமாக உள்ளது,” என இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார். மேலும், அர்ஜுன் சம்பத் மகன் மற்றும் நடிகை கஸ்தூரி கைதுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணியின் சார்பில், மருதமலை முருகன் கோயிலில், வேல் வழிபாடு நிகழ்ச்சி இன்று (நவ.18) நடந்தது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கடந்த ஆண்டு இந்த வேல் வழிபாடு, அன்னையர் முன்னணி சார்பில் சென்னிமலையில் துவங்கி பழனியில் நிறைவடைந்தது. நடப்பாண்டு திருப்பூர் அருகேயுள்ள கொங்கணகிரியில் ஆரம்பித்து திருப்பூர் அழகு மலையில் நிறைவுபெறுவது போல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இதற்கிடையே கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற 7 முருகன் மலை கோயில்களில் வேல் வழிபாடு நடத்திக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டு, மருதமலையில் வேல் வழிபாடு நடைபெற்றது.

இந்த வேல் வழிபாட்டுக்கு பிறகு மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது. வரும் 25-ம் தேதி திருப்பூரில் வேல்வழிபாடு நிறைவடைய உள்ளது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகனை கைது செய்து மோசமாக நடத்தியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகை கஸ்தூரி பேசியதற்கு, அவரை தேடிப்பிடித்து போலீஸார் கைது செய்துள்ளனர். இதையும் கண்டிக்கிறோம். திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமாக தான் உள்ளது. மாற்று மதத்தினர் இந்து கடவுள்களை இணையதளம் வாயிலாக அவதூறாக கூறுவது குறித்து புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை.

மருதமலையில் மாற்று மதத்தினரை பணியில் அமர்த்தி உள்ளனர். அவர்கள் எப்படி இந்த ஆன்மிக தளத்தில் பக்தர்களை நடத்துவார்கள். உடனடியாக அவர்களை பணியிட மாற்ற வேண்டும் அல்லது பணி நீக்கம் செய்ய வேண்டும். ஈஷாவுக்கு அதிக எண்ணிக்கையில் மக்கள் வருகின்றனர். அவர்கள் மக்களுக்கு சேவை செய்து வருவதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை,” என்று அவர் கூறினார். இந்நிகழ்வின் போது, மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in