Published : 11 Jun 2018 08:29 AM
Last Updated : 11 Jun 2018 08:29 AM

அமமுகவின் தலைமையை ஏற்போருடன் கூட்டணி: டிடிவி.தினகரன் நிபந்தனை

அமமுகவின் தலைமையை ஏற்று வருபவர்களுடன் மட்டுமே கூட்டணி அமைப்போம் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறினார்.

மன்னார்குடியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

18 பேர் அதிருப்தி இல்லை

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த 18 எம்எல்ஏக்களும் கட்சிக்காக தியாகம் செய்தவர்கள். சபரிமலையின் 18 படிக்கட்டுகள் போன்றவர்கள். இவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக வெளிவரும் தகவல்களில் உண்மை இல்லை.

கடந்த 3-ம்தேதி நடைபெற்ற அமமுக கட்சி அலுவலக திறப்பு விழா அன்று வெற்றிவேல், ஜெர்மனி சென்றிருந்தார். அதேபோல, தங்க. தமிழ்ச்செல்வன் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. மேலும், அன்றைய தினத்தில் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை வைத்திருந்த ஒரு சில எம்எல்ஏக்கள் வர இயலவில்லை. அது குறித்து என்னிடம் தெரிவித்துவிட்டனர்.

கடந்த 27-ம் தேதி திட்டமிடப்பட்ட கட்சி அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி மாற்றி வைக்கப்பட்டபோது, அடுத்த நல்ல நாள் ஜூன் 3-ம் தேதிதான் இருந்தது. கருணாநிதியை எதிர்த்துதான் எம்ஜிஆர், அதிமுகவை தொடங்கினார். அவர்களோடு உறவு வைத்துக்கொண்டால் அதிமுகவினர் யாரும் ஏற்க மாட்டார்கள். அதே நேரத்தில் அரசியலில் வெற்றி பெற்ற தலைவர் கருணாநிதி. அவரது பிறந்தநாளில் கட்சி அலுவலகத்தை திறப்பது தவறில்லை. இன்னும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் அமமுகவின் தலைமையை ஏற்று வரும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x