Published : 20 Jun 2018 09:32 AM
Last Updated : 20 Jun 2018 09:32 AM
தமிழக சட்டப்பேரவை தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களில் ஒருவரும், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் எம்எல்ஏவுமான கோதண்டபாணி, மாமல்லபுரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள். எனவே 3-வது நீதிபதியின் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்கும் நீதிபதி சரியான முறையில் ஆராய்ந்து உரிய தீர்ப்பு வழங்குவார் என நம்புகிறோம்.
தங்கதமிழ்செல்வன் அவருடைய தனிப்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அமமுக தலைவர் டிடிவி தினகரன் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்களும் 3-வது நீதிபதியின் தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அதன் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.
அமமுக தலைவர் டிடிவி தினகரன், எம்எல்ஏக்களை யாரும் கட்டுப்படுத்தவில்லை. சுதந்திரமாகவே அனைவரும் செயல்பட்டு வருகிறோம். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்கள் யாரும் முதல்வர் பழனிசாமி அணிக்குச் செல்ல தயாராக இல்லை. ஊகங்களின் அடிப்படையில்தான் இவ்வாறான கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதிமுகவை மீட்பதற்காகவே நாங்கள் வெளியில் வந்துள்ளோம். அதனால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தற்காலி இயக்கம்தான். சசிகலா தலைமையின்கீழ் வந்தால், அமமுக இயக்கம் தேவையில்லை. ஏனென்றால் நாங்கள் அனைவரும் அதிமுக உறுப்பினர்கள்.
தற்போதுள்ள தமிழக அரசின் செயல்பாடுகளை மக்கள் ஏற்கவில்லை. அனைத்து தரப்பினரும் அரசை எதிர்க்கும் நிலையே உள்ளது. மக்கள் பணிகளை நாங்கள் செய்வதை தடுப்பதற்காகவே எங்களை தகுதி நீக்கம் செய்துள்ளனர். இதன்மூலம், மக்களிடம் எங்களின் செல்வாக்கு அதிகரித்துதான் வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அமைந்த அரசை பாதுகாப்பது எங்களின் கடமை. அதனால்தான், 18 எம்எல்ஏக்களும் பழனிசாமி முதல்வராக இருப்பதை எதிர்த்து மனு அளித்தனர். அதனால், அவரை நீக்கிவிட்டு வேறு ஒருவர் முதல்வராக நியமிக்கப்பட்டால், டிடிவி தினகரனின் ஒப்புதலோடு அவரை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.
இவ்வாறு கோதண்டபாணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT