Published : 20 Jun 2018 07:01 PM
Last Updated : 20 Jun 2018 07:01 PM

இளைஞர்களுக்குப் போட்டியாக செயின் பறிப்பில் ஈடுபட்ட முதியவருக்கு போலீஸ் வலை

பொதுவாக செயின் பறிப்பில் இளைஞர்கள், இளம் சிறார்கள் ஈடுபட அவர்களுக்கு சவால் விடும் வகையில் முதியவர் ஒருவர் தனது புதிய மோட்டார் சைக்கிளில் சென்று இரண்டு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னையில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் போலீஸார் தீவிர வாகன சோதனை நடத்தி பலரை கைது செய்துள்ளனர். இது தவிர அவ்வப்போது பலரை கைது செய்தனர். அப்படி கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்களும், சிறுவர்களும் மட்டுமே.

ஆனால் கடந்த 5 நாட்களாக போலீஸார் நடத்தும் கடுமையான வாகன சோதனையையும் மீறி இரண்டு நாட்களுக்கு முன்னர் முதியவர் ஒருவர் இரண்டு மூதாட்டிகளிடம், மோட்டார் சைக்கிளில் வந்து செயின் பறித்துச் சென்றதைக் கண்டு போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேற்கு கே.கே.நகர், அன்னாஜி நகரில் வசிக்கும் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரின் மனைவி தர்மாம்பாள் (62) தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு தன் வீட்டருகில் நடந்து வரும்போது நீல நிற இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவர் அணிந்திருந்த தாலிச் செயினைப் பறித்துச் சென்றார்.

இதேபோன்று வளசரவாக்கம் வேலன் நகரில் வசிக்கும் லட்சுமி (74) இன்று மதியம் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் போது ராமகிருஷ்ணா நகர் அருகே வந்தபோது அவரருகில் வந்த நபர் ஒருவர் அவரிடம் முகவரி கேட்பது போல் கேட்டு திடீரென அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார்.

இரண்டு சம்பவங்கள் குறித்தும் புகார் அளித்த இருவரும் கூறிய தகவல் ஒரே மாதிரியாக இருந்தது. நீல நிற ஸ்கூட்டர் போன்ற வாகனம், வேட்டி சட்டை அணிந்திருந்தார், வயதானவர், ஹெல்மட் போடவில்லை என்று கூறியிருந்தனர். வயதானவர் என்பதை போலீஸார் நம்பவில்லை. ஆனால் செயின் பறிப்பு நடந்த இடங்களில் கிடைத்த சிசிடிவி பதிவுகளை போலீஸார் எடுத்து ஆய்வு செய்தபோது திடுக்கிட்டுப் போனார்கள்.

இரண்டிலும் சுமார் 60 வயதுக்கு மேல் மதிக்கத்தக்க முதியவர் செயினைப் பறிப்பது பதிவாகி இருந்தது. இளைஞர்களுக்குப் போட்டியாக முதியவரும் களத்தில் குதித்து இரண்டு செயின் பறிப்பையும் வெற்றிகரமாக நிகழ்த்திவிட்டாரே என்று ஆச்சர்யப்பட்ட போலீஸார் அவரைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x