Published : 02 Jun 2018 03:48 PM
Last Updated : 02 Jun 2018 03:48 PM

கர்நாடகா காவிரி நீர் தராவிட்டால் திமுகதான் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

கர்நாடக அரசாங்கம் தமிழகத்திற்கு காவிரி நீர் தராமல் பிரச்சினை ஏற்பட்டால், அதனை தீர்க்கக் கூடிய பொறுப்பு திமுகவுக்குத் தான் உண்டு என மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “கர்நாடக காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசாங்கம் காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்றுக்கொண்டு தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை தொடர்ந்து தர வேண்டும். கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் அரசாங்கம் தமிழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறது. விதிமுறைகளுக்கும், நியாய-தர்மங்களுக்கு மாறாகவும் முந்தைய கர்நாடக காங்கிரஸ் அரசு செயல்பட்டிருக்கிறது. அதைக் கண்டிக்கவோ, தமிழகத்திற்கு நீர் தர வேண்டும் என்றோ காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை கூட வலியுறுத்தியதில்லை.

தமிழக விவசாயிகள் நூற்றுக்கணக்கானோர் இறந்தும் காவிரி நீர் தருமாறு கர்நாடக அரசுக்கு திமுக ஒருமுறை கூட வலியுறுத்தவில்லை. தமிழக காங்கிரஸ் கட்சியும் அதனை வலியுறுத்தியது இல்லை. அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து காவிரி மேலாண்மை ஆணைய விதிகளுக்கு கட்டுப்பட்டு கர்நாடக அரசாங்கம் செயலாற்ற வேண்டும். இதில் ஏதேனும் வருங்காலத்தில் பிரச்சினை ஏற்பட்டால் அதனை தீர்க்க கூடிய பொறுப்பு திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமே உண்டு.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரங்களையும் வழங்கியிருக்கிறது. அதற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு உள்ளது” என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x