Published : 20 Jun 2018 09:33 AM
Last Updated : 20 Jun 2018 09:33 AM

செங்கல்பட்டு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்ற இளைஞர் மர்ம மரணம்: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் இறந்தார். இதனால் உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், சூனாம்பேடு அடுத்த போந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் தசரதன் (29). இவர் சென்னையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 14-ம் தேதி அதிகாலை செங்கல்பட்டு பகுதியில் நடந்து சென்றவரை, செங்கல்பட்டு நகர போலீஸார் சந்தேகத்தின் பேரில் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். தசரதன் குறித்து அவரது சகோதரரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததாகக் கூறப்படுகிறது.

வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் செங்கல்பட்டு காவல் நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உறவினர்கள் விசாரித்தனர். அதற்கு அவர்கள் காலை 5.30 மணிக்கே தசரதனை அனுப்பிவிட்டதாகக் கூறியுள்ளனர். 2 நாட்களாகத் தேடியும் தரசதன் குறித்து தகவல் கிடைக்காததால் சித்தாமூர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் செய்தார்.

இந்நிலையில் பொன்விளைந்த களத்தூர் அருகே மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்ட தரசதன் உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முன்பு திரண்டனர். தசரதன் இறப்புக்கு காரணமாக போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று தசரதனின் உடல் உடற்கூறு ஆய்வு வீடியோ எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x