

சென்னை: தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள டிரக் தமிழ்நாடு என்ற மலையேற்ற நடைபயிற்சி திட்டத்தை கைவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் 40 மலையேற்ற நடைபயிற்சி திட்டத்தை தமிழக அரசுஅறிமுகம் செய்துள்ளது. இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேற்ற நடைபயிற்சியை அனுமதிப்பது என்பது வனங்களில் உள்ள விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
தமிழகத்தில் 38 யானை வழித்தடங்கள் உள்ளன. அந்த பகுதியில் மலையேற்றத்தை அனுமதித்தால் மனித நடமாட்டம் காரணமாக விலங்குகளின் உணவு தேடல், இனப்பெருக்கம் போன்றவை பாதிக்கும்.
மனிதர்கள் மூலமாக வன உயிரினங்களுக்கும் நோய்தொற்று பரவும். மலையேற்ற பயிற்சிக்கு செல்பவர்களால் வனங்களில் காட்டுத்தீ போன்ற அசம்பாவிதங்களும், சுற்றுச்சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும். எனவேஇத்திட்டத்தை கைவிட தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும், எனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.