

தஞ்சாவூர்: தவறு செய்த அரசியல்வாதிகள்தான் பெரிய கோயிலுக்குள் வரத் தயங்குகின்றனர் என்று திமுக முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் கூறினார்.
தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற ராஜராஜ சோழன் சதய விழாவில் அவர் பேசியதாவது: சதய விழா கொண்டாடப்படும் இந்த அரங்கில் ஆயிரக்கணக்கான நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. ஆனால், கூட்டம் இல்லாமல் பெரும்பாலான நாற்காலிகள் காலியாக உள்ளன.
மொத்தம் 5 பக்கங்களில் இந்த விழாவுக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் பெயர்கள் உள்ளவர்கள் வந்திருந்தாலே, இந்த அரங்கம் நிரம்பி இருக்கும். இங்கு வராதவர்கள் பெயர்களை அச்சிடுவதால் என்ன பயன் எனத் தெரியவில்லை?
ராஜராஜ சோழன் சதய விழாவை பெருமையாக பேசுவது மட்டும் போதாது. இதுபோன்ற விழாவில் நேரில் பங்கேற்க வேண்டும்.
தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு எல்லா அரசியல்வாதிகளும் வரமாட்டார்கள். அரசியல் என்பது சேவை செய்வது. இந்த சேவையை யார் சரியாகச் செய்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் பெரிய கோயிலுக்குள் வர முடியும். தவறு செய்தவர்களுக்கு பயம். எனவேதான் அவர்கள் வரத் தயங்குகின்றனர்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா, பெரிய கோயிலுக்கு வந்து விட்டுச் சென்ற பிறகுதான் குடியரசு தலைவரானார். அதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.