தமிழக மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

ராமேசுவரம்: இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக விசைப்படகு மீனவர்கள் 12 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்து இலங்கை பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

கடந்த அக். 26-ல் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற சிலம்புச்செல்வன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் குணா, செஞ்சிவேல், வெங்கடேசன், சின்ன அப்பு, கார்த்தி, ரகு உள்ளிட்ட 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்கள் அனைவரையும் சிறைபிடித்தது.

12 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், பருத்தித்துறை நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷாந்தன், இந்த 12 மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து, விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in