“உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட வேண்டாம்” - திருமாவளவன்  

திருமாவளவன் (கோப்புப் படம்)
திருமாவளவன் (கோப்புப் படம்)
Updated on
1 min read

பெரம்பலூர்: “உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போட வேண்டாம்” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு அரசு திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக, பெரம்பலூருக்கு இன்று வருகை தந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். தமிழக மீனவர்களை, இந்திய மீனவர்களாக கருதாமல் தமிழ்நாட்டு மீனவர்களாக மத்திய அரசு கருதுகிறது. அவர்களை, இந்திய மீனவர்களாக கருத வேண்டும்.

கச்சத்தீவை மீட்பதே இந்தப் பிரச்சினைக்கு சரியான தீர்வு. தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும், கச்சத்தீவையும் மீட்பதாக இந்தியா - இலங்கை இடையிலான வெளியுறவு கொள்கை அமைய வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து, மத்திய அரசின் கவனத்துக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும். தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கடந்த முறை உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதா அல்லது கடந்த முறைபோல கால இடைவெளியில் நடத்துவதா என ஒரு கேள்வி உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் தேர்தலை நடத்த வேண்டும். அதேபோல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கால இடைவெளி முடிந்த பிறகு தேர்தலை நடத்தலாம். எனவே, உள்ளாட்சித் தேர்தலை தள்ளி போட வேண்டாம் என்பது எனது வேண்டுகோள்” என அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in