Last Updated : 12 Jun, 2018 04:41 PM

 

Published : 12 Jun 2018 04:41 PM
Last Updated : 12 Jun 2018 04:41 PM

மதுரையில் பட்டப்பகலில் அமமுக நிர்வாகி வெட்டிக் கொலை: முன்விரோதம் காரணமா? - போலீஸ் விசாரணை

மதுரை நகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வட்டச் செயலாளர் 4 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில், ''மதுரை காமராசர்புரம் பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (40). அமமுகவின் வட்டச் செயலராக இருந்த இவர் மதுரை கீழ்மதுரை ரயில் நிலைய ரோட்டிலுள்ள நியாய விலைக்கடையில் தற்காலிக ஊழியராகப் புணிபுரிந்தார்.

இவர் செவ்வாய்க்கிழமை காலை வழக்கம்போல், 10 மணிக்கு நியாய விலைக் கடையைத் திறந்து பணியைத் தொடங்கினார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர், கடைக்குள் புகுந்து முனியசாமியிடம் தகராறு செய்தனர். சிறிது நேரத்தில் அவரை கடைக்கு வெளியில் இழுத்து வந்து வாசலில் போட்டு சரமாரியாக அரிவாளால் வெட்டினர். கடைக்கு முன்பு ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். கொலையாளிகளை அவர்களால் தடுக்க முடியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த கீரைத்துறை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முனியசாமியின் உடலை மீட்டு விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. காவல் ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான தனிப்படையினர் கொலையாளிகளைத் தேடுகின்றனர்’’ என்று தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x