சென்னை மெட்ரோ ரயில்களில் அக்டோபரில் 90.83 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் அக்டோபரில் 90.83 லட்சம் பேர் பயணம்
Updated on
1 min read

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த அக்டோபர் மாதத்தில் 90 லட்சத்து 83 ஆயிரத்து 996 பேர் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர்.

பயணிகளுக்கு நம்பகத் தன்மை மற்றும் பாதுகாப்பான பயண வசதியை மெட்ரோ ரயில் நிறுவனம் அளித்து வருகிறது. இதனால், மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.

அந்த வகையில், நடப்பாண்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் 90 லட்சத்து 83 ஆயிரத்து 996 பேர் பயணம் செய்துள்ளனர். அதேநேரத்தில், செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 701 பயணிகள் குறைவாக பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக, அக்.6-ம் தேதி அன்று 4 லட்சத்து 42 பேர் பயணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கடந்த அக்டோபர் மாதத்தில் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40 லட்சத்து 75 ஆயிரத்து 666 பேரும், பயண அட்டைகளை பயன்படுத்தி 28 லட்சத்து 88 ஆயிரத்து 168 பேரும், டோக்கன்களை பயன்படுத்தி 4,287 பேரும், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 5,400 பேரும், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20 லட்சத்து 50 ஆயிரத்து 699 பேரும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை, வாட்ஸ்-அப் டிக்கெட் உள்ளிட்ட பயணச் சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in