சிறுதொழில் தொடங்க ஊராட்சி அனுமதி கட்டாயம்? - தமிழக பாஜக எதிர்ப்பு

சிறுதொழில் தொடங்க ஊராட்சி அனுமதி கட்டாயம்? - தமிழக பாஜக எதிர்ப்பு

Published on

சென்னை: சிறுதொழில் தொடங்க ஊராட்சியின் அனுமதியை கட்டாயமாக்கும் திட்டத்துக்கு தமிழக பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுதொழில் பதிவுகளை ஒற்றைச் சாளர முறையில் ஒரே நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. அதை முழுமையாக கடைப்பிடிக்காத நிலை தமிழகத்தில் இருக்கிறது.

இந்நிலையில், சிறு தொழில் தொடங்குவதற்கு ஊராட்சியில் அனுமதி பெறுவதை கட்டாயமாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. மின்கட்டணத்தை மூன்று முறை உயர்த்தியது, சொத்து வரி உயர்வு, பத்திரப் பதிவு கட்டணம் உயர்வு, தொழில் தொடங்க உரிமக் கட்டணம் உயர்வு என பல்வேறு காரணங்களால் தற்போது சிறு, குறுந்தொழில் செய்பவர்களும் மிகவும் சிரமத்துக்கும், நஷ்டத்துக்கும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே, அதுபோன்றதொரு திட்டத்தை வகுத்திருந்தால் தமிழகத்தில் சிறு தொழில் வளர்ச்சிக்கு இடையூறு ஏற்பட்டு விடாமல் உடனடியாக கைவிட வேண்டும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in