Published : 17 Jun 2018 10:46 AM
Last Updated : 17 Jun 2018 10:46 AM

கர்நாடகத்தில் மழையால் வரத்து குறைந்ததுகோயம்பேடு சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து அவற்றின் விலை உயர்ந் துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் வருகின்றன. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்து சில காய்கறிகள் வருகின்றன. இப் பகுதிகளில் நிலவும் வானிலை யில் மாற்றம் ஏற்படும்போது, கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு, விலையிலும் மாற்றம் ஏற்படுகிறது.

அந்த வகையில் கடந்த சில நாட்களாக கோயம்பேடு சந்தை யில் காய்கறிகள் வரத்து குறைந்து அவற்றின் விலை உயர்ந்து வருகிறது.

கடந்த வாரம் ரூ.55-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் நேற்று ரூ.70 ஆகவும், ரூ.20-க்கு விற்கப்பட்ட கத்தரிக்காய் ரூ.35 ஆகவும் உயர்ந்துள்ளன. மேலும், வெங்காயம் ரூ.16, சாம்பார் வெங்காயம், பாகற்காய் ஆகியவை தலா ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.21, முள்ளங்கி ரூ.25, முட்டைக்கோஸ் ரூ.8, கேரட் ரூ.28, பீட்ரூட் ரூ.30, முருங்கைக்காய் ரூ.30, பச்சை மிளகாய் ரூ.35 என உயர்ந்துள்ளன.

மற்ற காய்கறிகளான தக்காளி ரூ.14, அவரைக்காய் ரூ.30, வெண்டைக்காய் ரூ.15, புடலங்காய் ரூ.15 என பெரிய அளவில் விலை மாற்றம் இன்றி விற்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்க பொதுச்செயலர் பி. சுகுமார் கூறும்போது, “கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதன் காரணமாக அப்பகுதிகளில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அறுவடை காலம் முடிந்ததால் கத்தரிக்காய் போன்ற சில காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. அதன் விளைவாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்கு காய்கறிகள் விலை உயர்ந்தே இருக்கும்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x