Published : 26 Aug 2014 12:00 AM
Last Updated : 26 Aug 2014 12:00 AM

கொலை வழக்கு சாட்சிகளுக்கு கட்டாய போலீஸ் பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவு

கொலை வழக்கு சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை கட்டாயமாக்குவது குறித்து பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரைச் சேர்ந்த கே. திலகவதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை யில் தாக்கல் செய்த மனு விவரம்:

திருச்சியில் குடும்பத்துடன் வசிக்கிறேன். வழக்கறிஞரான எனது கணவர் கார்த்திகேயனை 2009, ஜூலை 2-ல் நாகு உள்ளிட்ட 13 பேர் கொலை செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. கொலையை நேரில் பார்த்த சுமனை, நாகுவின் குடும்பத்தினர் கடத்தி, பிறழ்சாட்சி அளிக்குமாறு மிரட்டினர். இதனால் சுமன் பிறழ்சாட்சியம் அளித்தார்.

இந்நிலையில், பன்னீர், மூர்த்தி, செல்லத்துரை மற்றும் கந்தர்வ கோட்டை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் ஆகியோர் தன்னைக் கடத்திச் சென்று பிறழ்

சாட்சியம் அளிக்குமாறு மிரட்டிய தாகவும் அதனால் பிறழ்சாட்சியம் அளித்ததாகவும் அந்த சாட்சி யத்தை ரத்து செய்து மறுசாட்சியம் பெறுமாறு நீதிமன்றத்தில் சுமன் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உயர் நீதிமன்றம் சுமனுக்கு பாதுகாப்பு வழங்கவும், மறு சாட்சியம் பெறவும் உத்தரவிட்டது.

பின்னர், கொலை வழக்கு கடந்த ஜூலை 21-ல் விசாரணைக்கு வந்தபோது, சுமனின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். எனவே, எனது கணவரின் கொலை வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் திலகவதி குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி என். கிருபாகரன் பிறப் பித்த உத்தரவு: குற்றவாளிகளை வழக்கிலிருந்து விடுவிப்பதற்காக சாட்சிகளை மிரட்டி பிறழ்சாட்சியம் அளிக்க வைப்பது மோசமான செயல். நாட்டில் கொலை உள் ளிட்ட கொடூரக் குற்றங்களில் தண் டனை வழங்குவது குறைவதும், குற்றவாளிகள் விடுதலையாவது அதிகமாக இருப்பதற்கும் சாட்சி களுக்கு பாதுகாப்பு இல்லாததே காரணமாகும். இதனால் குற்ற வழக்குகளில் சாட்சிகளின் பாதுகாப்பு முக்கியமாகும்.

இதைத் தொடரவிட்டால் குற்ற நீதி நிர்வாகம் மோசமான நிலையை அடையும். அது சமூகத்துக்கு நல்லதல்ல. நாட்டில் கொலை, கடத்தல் உள்ளிட்ட கொடூரக் குற்றங்கள் கடந்த 20, 25 ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. எனவே, சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதை அரசுகள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. இந்தக் காரணத் துக்காக தமிழக உள்துறை செயலர், தமிழக காவல் துறை இயக்குநர், மத்திய உள்துறைச் செயலர், மத்திய சட்ட ஆணையச் செயலர் ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரர் களாக சேர்க்கிறது.

குற்ற வழக்குகளில் சாட்சிகளை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? மிரட்டல் காரணமாக சாட்சிகள் பிறழ் சாட்சியாக மாறுவதால் குற்ற வழக்குகளில் தண்டனை விகிதம் குறைவதைத் தடுக்கும் வகையில் சாட்சிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? என்பது தொடர்பாக செப். 4-ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண் டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x