Published : 20 Jun 2018 07:50 AM
Last Updated : 20 Jun 2018 07:50 AM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் குரல் எழுப்பும்: பிருந்தா காரத் உறுதி

“துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் எழுப்பும்” என, அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நேற்று தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரங்களில் பாதிக்கப்பட்ட மக்களை பிருந்தா காரத் நேற்று 2-வது நாளாக சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர்கள் நல்ல முறையில் சிகிச்சை அளித்து வருகின்றனர். இது பாராட்டுக்குரியது. அதேநேரத்தில், சிகிச்சை முடிந்து வெளியே சென்றால் போலீஸார் கைது செய்வார்கள் என்ற அச்சத்துடனேயே அவர்கள் உள்ளனர்.

சுற்றுவட்டார கிராமங்களில் போலீஸார் நள்ளிரவில் வீடுகளை தட்டி மக்களை துன்புறுத்தி வருகின்றனர். ஐ.ஜி.யிடம் கேட்டால், ‘இரவு சோதனை எதுவும் நடக்கவில்லை’ என கூறுகிறார். அப்படியெனில் இரவு நேர சோதனைக்கு உத்தரவிட்டது யார்? சட்டவிரோதமாக இரவு நேரங்களில் வீடுகளை தட்டி பெண்களை துன்புறுத்தும் போலீஸாரை கைது செய்ய வேண்டும்.

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து கவலைப்படாமல் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்ததே இந்த சம்பவத்துக்கு முழு காரணம். தூத்துக்குடி சம்பவத்தில் நீதிமன்றம் தலையிட்டு நீதியை நிலைநாட்டும் என நம்புகிறோம். துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x