

சென்னை: சிறைக்கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை ஆய்வு செய்ய பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்க பிரதிநிதிகளை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறைத்துறை டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்களின் வசதிக்காக எளிமையான முறையில் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. புழல் சிறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வசதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சிறைகளிலும் படிப்படியாக அமல்படுத்தப்படும். இந்த நடைமுறைகளை மேம்படுத்த வேண்டிய வசதிகள் குறித்து தேவையான பரிந்துரைகளை அளிக்க வழக்கறிஞர்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி, சிறையில் கைதிகளை நேரடியாக சந்திக்க விடாமல் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டு இன்னும் அகற்றப்படவில்லை என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், சிறையில் வழக்கறிஞர்களுக்கான வசதிகளை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன் லா அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை நியமித்து விசாரணையை வரும் நவ.6-க்கு தள்ளிவைத்தனர்.