நவ.1-ல் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நவ.1-ல் 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Updated on
1 min read

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, கரூர் உட்பட 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவ.1-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சோழவந்தானில் தலா 4 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.

தென்னிந்திய கிழக்கு கடலோரப் பகுதிகளை ஒட்டி, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 30-ம் தேதி (இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நவ.1-ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் அக்.30 மற்றும் 31-ம் தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in