

ஈரோடு, விழுப்புரம், தேனி, ராமநாதபுரம், காஞ்சிபுரம் மாவட்டங்களி்ல் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார உட்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் 18 தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கு காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் அமைச்சகத்தின் சார்பில், அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளைக் கட்டமைப்பதற்காக மாநிலங்களுக்கு ரூ.17,201.38 கோடி வழங்க நிர்வாக ஒப்புதல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
அதில், தமிழகத்தின் திட்ட மதிப்பீடு ரூ. 151.35 கோடி. ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.40.05 கோடி, விழுப்புரம் மருத்துவமனைக்கு ரூ.40.05 கோடி, தேனி மருத்துவமனைக்கு ரூ.23.75 கோடி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.23.75 கோடி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.23.75 கோடி என மொத்தம் ரூ.151.35 கோடி அவசரகால மருத்துவப் பிரிவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அமைக்க பிரதமர் மோடி, காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள், உயிர் காக்கும் அமைப்பு முறைகளுடன் கூடிய 50, முதல் 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு இந்த திட்டத்தில் அமைக்கப்படும். மேலும், அவசரகால மருத்துவ மேலாண்மையில், சுகாதார நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாகவும் இது செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.