Published : 03 Jun 2018 09:49 AM
Last Updated : 03 Jun 2018 09:49 AM

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்தத் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த மே 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாலையில் சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. மறுநாள் ஹம்ஸ வாகனத்திலும், சூர்ய பிரபையிலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இவ் விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை மே 29-ம் தேதி நடைபெற்றது. மாலையில் ஹனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. இதையடுத்து சேஷ வாகனம், சந்திரப் பிரபை, தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், தங்கச் சப்பரம், யானை வாகனம் ஆகிய வாகனங்களில் காலை மற்றும் மாலை வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த பிரம்மோற்சவத்தின் அடுத்த முக்கிய நிகழ்வான திருத்தேர் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வரதராஜ பெருமாள் அமரவைக்கப்பட்டு வீதியுலா அழைத்து வரப்பட்டார். இந்தத் தேரோட்டத்தை மாவட்ட ஆட்சியர் பொன்னையா வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தார். மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், அதிமுக மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.

இத்தேரோட்டத்தையொட்டி காஞ்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்தனர். இதனால் காஞ்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. இத்தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானமும் வழங்கப்பட்டன. நாளை நடைபெறவுள்ள தீர்த்தவாரி நிகழ்வுடன் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் நிறைவுபெறுகின்றன. மறுநாள் ஜூன் 5-ம் தேதி த்வஜ ஆவரோஜணம் நிகழ்ச்சியான கொடி இறக்கும் நிகழ்ச்சி மாலையில் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x