ஜாபர் சாதிக் மீதான வழக்கு: இயக்குநர் அமீர் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

ஜாபர் சாதிக் மீதான வழக்கு: இயக்குநர் அமீர் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்ப உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இயக்குநர் அமீர் உட்பட 12 பேருக்கு சம்மன் அனுப்ப சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த மார்ச் மாதம் கைது செய்தனர். இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகளும் கடந்த ஜூன் 26-ல் ஜாபர் சாதிக்கை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாபர் சாதி்க்கின் சகோதரர் முகமது சலீம் மற்றும் திரைப்பட இயக்குநர் அமீரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் முகமது சலீமை அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாபர் சாதிக், முகமது சலீம், ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா பானு, இயக்குநர் அமீர் உட்பட 12 பேருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை 13-வது கூடுதல் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில்வேலவன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறையில் உள்ள ஜாபர் சாதிக், அவரது சகோதர் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அதையடுத்து இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக வரும் நவ.11-க்கு தள்ளிவைத்துள்ள நீதிபதி இந்த வழக்கில் தொடர்புடைய அமீர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in