மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு அவசர கூட்டம் நடத்த ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு அவசர கூட்டம் நடத்த ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published on

சென்னை: தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு அவசரக் கூட்டம் நடத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், நடுக்கடலில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களில் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததுடன், ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்து சென்றுள்ளனர். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தொடர்ந்து நீடிப்பது கண்டிக்கத்தக்கது.

மீனவர்கள் பிரச்சினை தொடரக்கூடாது. எனவே மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களை மீட்பதுடன், இனிமேல் இதுபோன்ற கைது நடவடிக்கை தொடரக்கூடாது என்பதற்காக அவசரக் கூட்டம் நடத்த இலங்கை அரசிடம் கண்டிப்போடு பேசி தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நல்ல முடிவை ஏற்படுத்த வேண்டும். மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உரிய பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in