திண்டுக்கல் அருகே திடீரென முளைத்த 2 கிலோ எடை கொண்ட காளான்: கிராம மக்கள் வியப்பு

திண்டுக்கல் அருகே திடீரென முளைத்த 2 கிலோ எடை கொண்ட காளான்: கிராம மக்கள் வியப்பு
Updated on
1 min read

வேடசந்தூர்: வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டியில் காளான் பறிக்கசென்ற சிறுவனுக்கு இரண்டு கிலோ எடையுடைய மெகா காளான் கிடைத்தது. அதிக எடைகொண்ட காளானை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செங்குளத்துப்பட்டியை சேர்ந்த சுந்தரம் மகன் கவின். வடமதுரையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில தினங்களாக வடமதுரை பகுதியில் பரவலாக மழைபெய்துவருவதால் அப்பகுதி சிறுவர்கள் காலையில் எழுந்து காளான்கள் பறிக்கச்செல்வது வழக்கம்.

வழக்கமாக சிறு சிறு காளான்கள் கிடைக்கும் அவற்றை கொண்டுவந்து வீட்டில் சமைத்து சாப்பிடுவர். நேற்று விடுமுறை தினம் என்பதால் காலையில் சிறுவர்கள் சிலர் காளான்களை தேடிச்சென்றனர்.சிறுவன் கவின் புதர்கள் அடங்கிய பகுதியில் பார்த்தபோது பெரிய அளவிலான காளான் ஒன்று இருந்தது தெரிந்தது. இதை பறித்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.

வழக்கத்துக்கு மாறாக பெரிய அளவில் காளானை சிறுவன் எடுத்துச்செல்வதை கிராமமக்கள் வியந்து பார்த்தனர். இந்த காளானை எடை பார்த்ததில் 2.25 கிலோ கிராம் இருந்தது. இயற்கையாகவே முளைத்த வெள்ளை காளான் உணவுக்கு உகந்தது என்பதால் சிறுவனின் குடும்பத்தினர் மெகா எடை கொண்ட காளானை சமைத்து சாப்பிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in