சட்டநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீக்கம்: மயிலாடுதுறை ஆட்சியர் நடவடிக்கை 

படம்: வெ. தெட்சிணாமூர்த்தி
படம்: வெ. தெட்சிணாமூர்த்தி
Updated on
1 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சட்டநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வெ.தெட்சிணாமூர்த்தியை பதவி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

சீர்காழி ஊராட்சி ஒன்றியம், சட்டநாதபுரம் கிராம ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கடந்த 2023 -ம் ஆண்டு ஏப்.20 -ம் தேதி உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆய்வு மேற்கொண்டார். அதன்படி அரசு விதிகளை மீறி ஊராட்சி நிதியில் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டதால், குறைபாடுகள் உறுதி செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரும், ஊராட்சி ஆய்வாளருமான ஏ.பி.மகாபாரதியால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப்பிரிவு 205-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசிதழ் எண் 41, பகுதி 6, பிரிவு 2-ல் 9.10.2024 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதனை அடுத்து சட்டநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வெ.தெட்சிணாமூர்த்தியை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட வெ. தட்சிணாமூர்த்தி அதிமுகவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in