தேவர் ஜெயந்தி: பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களை அனுமதிக்க ஐகோர்ட் மறுப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

மதுரை: தேவர் ஜெயந்திக்காக பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது. மதுரையைச் சேர்ந்த சங்கிலி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை அக். 30-ல் தமிழக அரசு சார்பில் அனுசரிக்கப்படுகிறது. குருபூஜை நாளில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்துக்கு செல்வது வழக்கம். இதையொட்டி தேவர் நினைவிடத்தில் அக்.28, 29 மற்றும் 30-ம் தேதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தேவர் ஜெயந்திக்கு வாடகை வாகனங்களில் பசும்பொன் செல்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக வாடகை வாகனங்களில் பசும்பொன் செல்ல போலீஸார் அனுமதி மறுத்து வருகின்றனர். எனவே, பசும்பொன்னுக்கு வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.

மனுவை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கௌரி அமர்வு வெள்ளிக்கிழமை விசாரித்து, “பசும்பொன்னுக்கு எந்த வாகனத்தில் செல்ல வேண்டும் என்பதை மாவட்ட நிர்வாகம் தான் முடிவு செய்யும். இதனால் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க விரும்பவில்லை. மனு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும். விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in