அரியலூர் அருகே விடுதி உணவில் பல்லி - 5 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

அரியலூர் அருகே விடுதி உணவில் பல்லி - 5 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
Updated on
1 min read

அரியலூர்: செந்துறை அருகே விடுதி சாப்பாட்டில் பல்லி இருந்ததால், காலை உணவு சாப்பிட்ட 5 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அடுத்த பொன்பரப்பி கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் மாணவிகளுக்கு விடுதி உள்ளது. இந்த விடுதியில் பிளஸ் 1 பயிலும் மாணவிகள் 3 பேர், பிளஸ் 2 பயிலும் மாணவிகள் 3 பேர் என 6 பேர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இன்று (அக்.25) காலை உணவாக மாணவிகளுக்கு பொங்கல் தரப்பட்டுள்ளது. இதனை விடுதியில் தங்கியுள்ள 5 மாணவிகள் சாப்பிட்டுள்ளனர். தொடர்ந்து, மாணவிகள் பள்ளிக்குச் சென்றுவிட்டனர். அங்கு போனதும் அந்த 5 மாணவிகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவிகள் பொன்பரப்பி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும், மற்றொரு மாணவி வாங்கி வைத்திருந்த பொங்கலை ஆய்வு செய்ததில் அதில் பல்லி இறந்த நிலையில் சமைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாணவிகள் சாப்பிட்ட பொங்கலில் பல்லி இறந்து கிடந்ததால், மயக்கம் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டு, அந்த மாணவிகளுக்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in