பண மோசடி வழக்கு: அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்; மேலும் 50 பேருக்கு சம்மன்

செந்தில் பாலாஜி | கோப்புப் படம்
செந்தில் பாலாஜி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: பண மோசடி வழக்கின் விசாரணைக்காக சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். இந்த வழக்கில் மேலும் 50 பேருக்கு சம்மன் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 2011-16 அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 வழக்குகள் பதிவு செய்தனர். சென்னை சிங்காரவேலர் மாளிகையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நீதிபதி சஞ்சய் பாபா முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் மொத்தம் 2,222 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முதலில் உள்ள 100 பேருக்கு மட்டும் ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் ஆஜராகினர். பலர் விசாரணைக்கு வராததால் அவர்களுக்கு மீ்ண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மேலும் 50 பேருக்கு சம்மன் பிறப்பித்து, விசாரணையை நவம்பர் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in