Published : 21 Aug 2014 04:11 PM
Last Updated : 21 Aug 2014 04:11 PM

கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த இளைஞரின் கை வெட்டப்பட்டது: ஊராட்சித் தலைவரின் கணவர் உட்பட 3 பேர் கைது

கால்மேல் கால்போட்டு அமர்ந் திருந்த இளைஞரின் கையை வெட்டியதாக ஊராட்சித் தலைவி யின் கணவர் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள சிறுவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகன் கார்த்திக் (17). கூலி தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகிறார். திங்கள்கிழமை இவர் தன் வீட்டின் முன் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தாராம். அப்போது அந்த வழியாக வந்த அவரது உறவினர் அழகாபுரி ஊராட்சி மன்றத் தலைவர் தேவியின் கணவர் கிருஷ்ணன் என்பவர் மரியாதை இல்லாமல் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பதாகக் கூறி கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சிறிதுநேரம் கழித்து பிரச்சினை முடிவுக்கு வந்தது. அடுத்த நாளும் அதேபோல மீண்டும் இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில், கை வெட்டப்பட்ட நிலையில் கார்த்திக் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட கார்த்திக் கூறியது: திங்கள்கிழமை என் வீட்டின் அருகில் நாற்காலியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தேன். அப்போது போதையில் அந்த வழியாக வந்த அழகாபுரி ஊராட்சி மன்றத் தலைவர் தேவியின் கணவர் கிருஷ்ணன் என்னிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் என் தாயார் வந்து விலக்கிவிட்டார். அடுத்த நாளும் இதேபோல, என்னிடம் தகராறில் ஈடுபட்டார். இனி இங்கே இருந்தால் மேலும் பிரச்சினை ஏற்படும் என்பதால் என் பெற்றோர் என்னை ஊரைவிட்டு வெளியூர் செல்லும்படி கூறினர்.

எனவே, நான் வெளியூர் செல் வதற்காக பஸ்ஸில் சென்று கொண்டிருந்தேன். அப்போது என்னை பின்தொடர்ந்து வந்த கிருஷ்ணனின் தம்பி கண்ணன், அவரது உறவினர் குமார் ஆகியோர் சிவகங்கை அருகே அருணகிரி என்ற இடத்தில் பஸ்ஸை வழிமறித்து என்னை மிரட்டி இழுத்துச் சென்றனர். சற்றுதொலைவில் கிருஷ்ணன் இருந்தார். அப்போது கண்ணனும், குமாரும் என்னை மிதித்தனர். பின்னர் கிருஷ்ணன் என் இடது கையை வெட்டி தோப்புக்குள் வீசினார் என்று தெரிவித்தார்.

கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் ஆ.முக்குளம் போலீஸார் புதன்கிழமை வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் கிருஷ்ணன், கண்ணன், குமார் ஆகிய 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x